கிக் எனப்படும் இணையவழி செயலிப் பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது. சவாரிப் பகிர்வு, உணவு விநியோகம், சரக்குப் போக்குவரத்து, தொழில்முறை சேவைகள் போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தியாவில் கிக் பொருளாதாரம் 2024-25-ம் ஆண்டில் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் இருப்பார்கள் என்றும், 2029-30-ம் ஆண்டில் இது 2.35 கோடியை எட்டும் என்றும் நித்தி ஆயோக் கணித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு கிக் தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மத்திய பட்ஜெட் 2025-26 அறிவிப்பில் சில அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
(i) இ-ஷ்ரம் தளத்தில் இணையவழி தொழிலாளர்களை பதிவு செய்தல்
(ii) அடையாள அட்டைகள் வழங்குதல்
(iii) ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பாதுகாப்பு
ஆகியவை தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய சுகாதாரத் திட்டம், இந்தியாவில் உள்ள 31,000 க்கும் மேற்பட்ட பொது, தனியார் மருத்துவமனைகளில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை சிகிச்சை பெற ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டை வழங்குகிறது.
இந்த பட்ஜெட் ஒதுக்கீடுகளை விரைவாக செயல்படுத்துவதற்காக, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம் விரைவில் திட்டப் பணிகளை தொடங்க உள்ளது. முதல் கட்டமாக, இ-ஷ்ரம் தளத்தில் தங்களை சுயமாக பதிவு செய்யுமாறு கிக் தொழிலாளர்களை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் அவர்கள் விரைவில் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற பரிசீலிக்கப்படுவார்கள்.
பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் அமைச்சகத்தின் இ-ஷ்ரம் தளத்தைப் பார்வையிட்டு முன்னுரிமை அடிப்படையில் தங்கள் பதிவை மேற்கொள்ளலாம். இ-ஷ்ரம் தளத்துக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: